பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிப்பு


பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிப்பு
x
தினத்தந்தி 31 May 2022 4:18 PM GMT (Updated: 31 May 2022 4:19 PM GMT)

கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

தேனி

கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இயற்கை வளம் நிறைந்த இந்த மலைப்பாதையில் மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள் அதிக அளவில் வசிக்கின்றன. குறிப்பாக மலைப் பாதையோரங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை எழில்கொஞ்சும் வனப்பகுதியை ரசித்து செல்கின்றனர். அப்போது அவர்கள் கொண்டு வரும் திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

இதனால் குமுளி செல்லும் மலைப்பாதையின் இருபுறங்களிலும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் கிடக்கின்றன. இந்த பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் உணவுப்பண்டங்களை வனவிலங்குகள் உண்ணுவதால் அவை இறக்க நேரிடுகின்றன. இதனால் குரங்குகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மேலும் சுற்றுபுறச்சூழல் பெரிதும் பாதிக்கப் படுகிறது.எனவே லோயர்கேம்ப் - குமுளி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை வீசி செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பாதையில் வனத்துறையினர் ரோந்துபணி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்


Next Story