தூத்துக்குடி அருகே 490 பவுன் நகை மோசடி வழக்கில்மேலும் 8 பேர் கைது


தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:47 PM GMT)

தூத்துக்குடி அருகே 490 பவுன் நகை மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 490 பவுன் தங்கநகைகளை மோசடி செய்த வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை மோசடி

தூத்துக்குடி புதியம்பத்தூர், நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மதன்குமார் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் தொடர்பு கொண்டு உள்ளனர். அவர்கள் தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை ஷேர்மார்க்கெட், நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாகவும், அவ்வாறு கொடுப்பவர்களிடம், 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறி உள்ளனர்.

இதை நம்பிய மதன்குமார் கடந்த 06.05.2023 அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்த 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளார். இதில் மதன்குமாருக்கு ரூ.40 ஆயிரம் பணம் மட்டுமே கொடுத்து உள்ளனர். கார் வாங்க எந்த முன்பணமும் செலுத்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மதன்குமார் கிரேனா வீட்டுக்கு சென்று கேட்டு உள்ளார். அப்போது, கிரேனா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன்குமார் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்தார்.

490 பவுன்

இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேரிடம், பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டிதருவதாக கூறி 490 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த ரமேஷ் மகள் சந்தியா (24), வடக்கு பரும்பூரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மாரிச்செல்வம் (29), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரை சேர்ந்த வெள்ளபாண்டி மகன் தங்ககுமார் (31), புதியம்புத்தூரை சேர்ந்த ராமர் மகன் கிஷோர் ராகுல் (23), நடுவக்குறிச்சியை சேர்ந்த பெரும்படை தங்கம் மகன் பட்டு மாரியப்பன் (31), ஆர். சி தெருவை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மகன் சுந்தர விநாயகம் (23), பாலகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (27), அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story