கோவையில் 57,072 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்


கோவையில் 57,072 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
x

கோவையில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 57,072 பேர் எழுதினர்.

கோயம்புத்தூர்


கோவையில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 57,072 பேர் எழுதினர்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் இருந்து 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 76 ஆயிரத்து 787 பேர் விண்ப்பித்தனர்.

இவர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை மாவட்டம் முழுவதும் 247 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் முன் காலை 7 மணி முதல் குவிய தொடங்கினர். தேர்வர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

17 பறக்கும் படை

தேர்வர்களின் நுழைவு சீட்டை சரிபார்த்த பின்னர் தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை கண்காணிக்க 24 மொபைல் அலுவலர்கள், சப்-கலெக்டர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டிருந்தது.

இதுதவிர மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு தேர்வானது கண்காணிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

கோவையில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வர்கள் அனைவரும் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய கருப்பு நிறம் கொண்ட பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். பென்சில் மற்றும் ஏனைய நிற பேனாக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் செல்போன், ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களையும் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தேர்வு 12.30 மணிக்கு முடிந்த நிலையில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை சரிபார்த்து கொள்ள 15 நிமிடங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை 12.45 மணிக்கு அறை கண்காணிப்பாளர்களிடம் வழங்கினர். கோவையில் நேற்று நடைபெற்ற தேர்வை 57,072 பேர் எழுதினர். இது 74 சதவீதம் ஆகும். 19,715 பேர் எழுத வரவில்லை. தேர்வை முன்னிட்டு அந்தந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.


Next Story