கூடலூர் பகுதியில்மல்சிங் பேப்பர் மூலம் வாழை சாகுபடி


கூடலூர் பகுதியில்மல்சிங் பேப்பர் மூலம் வாழை சாகுபடி
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:45 PM GMT)

கூடலூர் பகுதியில் மல்சிங் பேப்பர் மூலம் வாழை சாகுபடி நடைபெறுகிறது.

தேனி

கூடலூர் பகுதியில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, மொச்சை, தட்டைபயறு வகைகளையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட பண பயிர் வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அழித்துவிட்டு ஒட்டு ரக திசு வாழைகளை சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு வருட பயிரான திசு வாழை நட்டு மூன்று மாதங்கள் வரை ஊடுபயிராக வெங்காயம், தக்காளி, செண்டு பூக்களையும் சாகுபடி செய்கின்றனர்.

இந்த பகுதியில் தற்போது விவசாயிகள் மல்சிங் பேப்பர் மூலம் நூதன முறையில் வாழை பயிர்களை நடவு செய்து வருகின்றனர். அவ்வாறு நடவு செய்வதால் களைகள் வளர்வதில்லை, பூச்சிகள் மூலம் நோய் தாக்குவதில்லை மேலும் ஈர பதத்தை வெளி விடாமல் இந்த மல்சிங் பேப்பர்கள் தடுத்து விடுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வேலையாட்கள் தேவை குறைகிறது. இதன் காரணமாக கூடலூர் பகுதி விவசாயிகள் இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு கிலோ வாழைக்காய் ரூ.40-ல் இருந்து ரூ.60 வரை விற்பனையாகிறது. ஒரு தார் 30 கிலோவில் இருந்து 35 கிலோ வரை எடை உள்ளது. இதனால் அதிக மகசூல் கிடைப்பதால் இப்பகுதி விவசாயிகள் நூதன முறையில் வாழை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Related Tags :
Next Story