வெவ்வேறு சம்பவங்களில்பிளஸ்-1 மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில்பிளஸ்-1 மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2023 6:45 PM GMT (Updated: 27 Feb 2023 6:46 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-1 மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி

பிளஸ்-1 மாணவர் தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் தனுஷ் (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தனுஷ் சரியாக படிக்காமல் இருந்ததால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது தனுஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜதானி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி சாவு

கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (37). மாட்டு வியாபாரி. இவரது மனைவி கவிதா. இவர்கள் தற்போது கம்பம் அருகே உள்ள அண்ணாபுரத்தில் வசித்து வருகின்றனர். ரமேசுக்கு இருதய நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக மாத்திரை சாப்பிடாமல் இருந்ததால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி வலி தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story