ஈரோடு கிழக்கு தொகுதியில்: தி.மு.க-அ.தி.மு.க.வினர் நூதன பிரசாரம்


ஈரோடு கிழக்கு தொகுதியில்: தி.மு.க-அ.தி.மு.க.வினர் நூதன பிரசாரம்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தூதன முறையில் பிரசாரம் செய்கிறார்கள். பாத்திரம் விளக்கி, துணி துவைத்து வாக்கு சேகரிக்கிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசும், தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நூதன முறையில்...

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நூதன முறையில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். அதன்படி தி.மு.க. அமைச்சர்கள் நாசர் மற்றும் செஞ்சி மஸ்தான் பரோட்டா போட்டும், அமைச்சர் சு.முத்துசாமி பக்கோடா போட்டும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தும், அமைச்சர் சி.வி.கணேசன் இஸ்திரி போட்டும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. டீ போட்டும், மீன் வியாபாரம் செய்தும், சென்னை மேயர் பிரியா முரசு கொட்டியும் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். நேற்று முன்தினம் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் கனிமொழி, ஈரோடு அம்பேத்கர் நகரில் ஒரு வீட்டில் பாத்திரம் கழுவியும், தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் துணிதுவைத்தும் வாக்குகள் சேகரித்தனர்.

இதேபோல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டும், எஸ்.பி.வேலுமணி கொங்கு ஒயிலாட்டம் ஆடியும், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தோசை சுட்டும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.


Next Story