வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்பு


வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:45 PM GMT)

வேதாரண்யத்தில் விட்டு விட்டு பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:


வேதாரண்யத்தில் விட்டு விட்டு பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் டன்

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இப்பகுதியில் உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய உப்பு உற்பத்தி இந்தாண்டு அடிக்கடி பெய்த கோடை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

உப்பு பாத்திகளில் மழைநீர்

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்த திடீர் மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு பாத்திகள் சேதம் அடைந்தது. இதனால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழை நீரில் கரைந்து வீணாகி உள்ளது.

உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வார காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அடிக்கடி பெய்து வரும் கோடை மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story