கடமலைக்குண்டுவில் இரு தரப்பினர் மோதல்; ஒன்றிய கவுன்சிலர் உள்பட 7 பேர் கைது


கடமலைக்குண்டுவில்  இரு தரப்பினர் மோதல்; ஒன்றிய கவுன்சிலர் உள்பட 7 பேர் கைது
x

கடமலைக்குண்டுவில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். அதே தெருவை சேர்ந்தவர் சுருளிமுருகன் (வயது 34). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுருளிமுருகன், அவரது உறவினர்களான கடமலைக்குண்டு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி (38), அவரது கணவர் வேல்முருகன் (41), ஈஸ்வரன் (36), செந்தில்முருகன் (35), சுருளியம்மாள் (45), அய்யம்மாள் (54) உள்பட 10 பேர் சேர்ந்து, பெருமாள் மற்றும் அவருடைய மனைவி தமிழ்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டினர். அப்போது அங்கு வந்த தமிழ்செல்வியின் அண்ணன் பால்பாண்டி (39), அக்காள் செல்லபாண்டியம்மாள் (37) ஆகியோர் சுருளிமுருகன் தரப்பினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் சுருளிமுருகன் தரப்பினர் பால்பாண்டியை தாக்கியதுடன், அவருடைய மோட்டார்சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தமிழ்செல்வி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளிமுருகன், உமாமகேஸ்வரி உள்பட 7 பேரை கைது செய்தனர்.


Next Story