கள்ளக்குறிச்சியில் இளைஞர் திறன் திருவிழா கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது


கள்ளக்குறிச்சியில்  இளைஞர் திறன் திருவிழா  கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சியில் இளைஞர் திறன் திருவிழா கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின்கீழ் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநர் சுந்தரராஜன், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 8-ம் வகுப்பு படித்து முடித்த 35 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் 13 தொழில் பயிற்சி நிலையங்கள் கலந்து கொண்டு 95 இளைஞர்களை தொழிற் திறன் பயிற்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு தொழிற் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கி பேசினாா்.

அப்போது அவர் பேசுகையில், இப்பயிற்சியானது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை அளிக்கப்படும். பயிற்சியின்போது மூன்றில் ஒரு பங்கு பயிற்சி காலத்தில் பணியிட பயிற்சியுடன் மனதிறன் பயிற்சியும், ஆங்கில அறிவு, கணினி பயன்பாடு, இன்டர்நெட் உபயோகம், ஆளுமை திறன் மேம்பாடு, மென் திறன் உள்ளிட்ட கூடுதல் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.இத்திறன் பயிற்சி மூலம் நல்ல திறன்களை வளர்த்துக் கொண்டு புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு அரசின் சார்பில் தொழிற்கடனுதவி, வங்கி கடனுதவி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே இத்திறன் திருவிழாவை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தாங்களாகவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் உதவி திட்ட இயக்குநர்கள் நாராயணசாமி, கார்த்திகேயன், வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார் மற்றும் சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story