கருங்கல்பாளையத்தில் தபால் தலை கண்காட்சி


கருங்கல்பாளையத்தில் தபால் தலை கண்காட்சி
x

கருங்கல்பாளையத்தில் தபால் தலை கண்காட்சி நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்ட அஞ்சல் துறை சார்பில், இந்திய அஞ்சல் வார விழா கடந்த 9-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 9-ந் தேதி உலக அஞ்சல் தினமும், நேற்று முன்தினம் சேமிப்பு தினமும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நேற்று தபால் தலை சேகரிப்பு ஊக்குவிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் அஞ்சல் நிலையத்தில், தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. ஈரோடு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கர்ணாகர் பாபு தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், இந்தியா சுதந்திரம் அடைந்த தேதி முதல் இதுவரை வெளியிடப்பட்ட தபால் தலைகள் மற்றும் தபால் உரைகள் இடம் பெற்றிருந்தன. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதில் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜசுந்தரம், கருங்கல்பாளையம் தபால் நிலைய அதிகாரி ஜீவதாஸ், தபால் தலை சேகரிப்பாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். மேலும் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் மாணவ -மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இன்று (வியாழக்கிழமை) தபால் பட்டுவாடா தினமும், நாளை (வெள்ளிக்கிழமை) காப்பீட்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது.


Related Tags :
Next Story