குமரியில் 'நீட்' தேர்வை 4,151 பேர் எழுதினர்


குமரியில் நீட் தேர்வை 4,151 பேர் எழுதினர்
x

குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. தேர்வை 4 ஆயிரத்து 151 பேர் எழுதினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. தேர்வை 4 ஆயிரத்து 151 பேர் எழுதினர்.

நீட் தேர்வு

மருத்துவ படிப்புகளில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதற்காக குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, கோணம் கேந்திரா வித்யாலயம் பள்ளி என 6 மையங்களில் மொத்தம் 4,473 பேர் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 322 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதனால் 6 மையங்களிலும் மொத்தம் 4 ஆயிரத்து 151 பேர் தேர்வு எழுதினர். தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடந்தது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதாவது மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தேவையான ஆவணங்கள்

மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை காட்டிய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ-மாணவிகள் அணிவகுத்து நின்றனர். பின்னர் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சானிடைசரும் வழங்கப்பட்டது. சில மாணவர்கள் வெயிலில் காத்திருந்ததால், அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தபோது, அதிகமாக இருந்தது. அந்த மாணவர்களை சிறிது நேரம் நிழலில் அமர வைத்து, பின்னர் வெப்ப நிலை பரிசோதித்து சீரானதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசத்தை மாணவ- மாணவிகள் அணிந்தபடி தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் கையில் 50 மில்லி அளவு கொண்ட கிருமி நாசினி திரவம், தேர்வுக்கு தேவையான ஆவணங்களை கொண்டு சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கார், இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் காலை 11 மணிக்கு முன்னதாகவே வந்ததால் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் சாலையோரம் காத்திருந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களது வருகைக்காக பெற்றோர் அங்கே காத்திருந்தார்கள். ஆனால் தேர்வு மையம் முன் ஏராளமானவர்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

நீட் தேர்வையொட்டி ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையத்துக்குள் செல்லும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து போலீசார் விளக்கி கூறினர். மாணவ-மாணவிகள் மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வு மையத்தின் மெயின் நுழைவு வாசல் மூடப்பட்டது. அதன்பின்பு தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியே காத்திருந்தனர்.


Next Story