கும்பகோணத்தில், பூக்களின் விலை உயர்வு


கும்பகோணத்தில், பூக்களின் விலை உயர்வு
x
தஞ்சாவூர்

கும்பகோணம்:

பூமார்க்கெட்

கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. இந்த பூக்கடைகளுக்கு திண்டுக்கல், திருச்சி, நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தினமும் டன் கணக்கில் பூக்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும்.

இங்கிருந்து நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். கும்பகோணத்தில் பூக்கள் விலை அடிக்கடி ஏற்றம், இறக்கமாக மாறி வருகிறது.

ஆயுத பூஜை

திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும். அதன்படி இந்த ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் கும்பகோணத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.300-க்கு விற்ற 1 கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.600-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.800-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.600-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்மங்கிப்பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

In Kumbakonam, the price of flowers increases

ரூ.300-க்கு விற்ற அரளி ரூ.500-க்கும், ரூ.40-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.60-க்கும், ரூ.250-க்கு விற்ற ரோஜாப்பூ ரூ.350-க்கும் விற்பனையானது. அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது.

பூக்களின் விலை உயர்ந்து இருந்தாலும் தேவை என்பதால் மார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, புரட்டாசி மாதத்தில் கோவில்களுக்கு மட்டுமே பூக்கள் தேவை இருந்தது. தற்போது ஐப்பசி மாதம் என்பதாலும், நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதாலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும் மக்களும் அதிக அளவில் பூக்களை வாங்கி சென்றனா். மேலும் நாளை பூக்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நேற்றே பூக்களை வாங்கி சென்றனர் என்றனர்.


Next Story