குமுளி வனப்பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்


குமுளி வனப்பகுதியில்  சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

குமுளி வனப்பகுதியில் சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தமிழக எல்லையில் குமுளி அமைந்துள்ளது. தமிழக எல்லையான குமுளியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிலைய வசதி இல்லாததால் சாலையோரங்களிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இப்பகுதியில் தமிழக அரசு எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை இதனால் சாலையோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகளில் உள்ள கழிவுப்பொருட்களை சிலர் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அங்கு சுற்றித்திரியும் வன விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story