குமுளி வனப்பகுதியில்சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்


குமுளி வனப்பகுதியில்சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:45 PM GMT)

குமுளி வனப்பகுதியல் சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தமிழக எல்லையில் குமுளி அமைந்துள்ளது. தமிழக எல்லை குமுளியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிலைய வசதிகள் இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர்.

இப்பகுதியில் தமிழக அரசு சார்பில், போலீஸ் சோதனைச்சாவடி, வனத்துறை சோதனைச்சாவடிகள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது. எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பது இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகளில் இருந்து கழிவுப்பொருட்களை சிலர் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொண்டுவந்து தமிழக எல்லை வனப்பகுதிகளில் கொட்டுகின்றனர். மேலும் சாலையோரங்களில் சிறு,சிறு மூட்டைகளாக கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், அங்கு சுற்றித் திரியும் வனவிலங்குகளும் அதில் இருக்கும் உணவுகளை சாப்பிட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகள் கலந்த குப்பைக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுவதை தடுக்க தமிழக வனத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story