மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலை முயற்சி


மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 6 Oct 2023 8:15 PM GMT (Updated: 6 Oct 2023 8:15 PM GMT)

மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

தற்கொலைக்கு முயற்சி

மதுரை செல்லூர் மருதுபாண்டியர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கொக்கி விக்னேஷ் என்ற விக்னேஷ்(வயது 29). இவர் திருச்சியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். மேலும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக அவர் மனநல பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கொக்கி விக்னேஷ் நேற்று முன்தினம் சிறையில் உள்ள கழிப்பறையில் பிளேடால் தனது இடது கையில் 6 இடங்களில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் கொக்கி விக்னேஷ் சம்பவத்தன்று உறவினர்களிடம் பேசுவதற்காக சிறையில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைத்தார். ஆனால் அவர்களுக்கு போன் போகவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.


Next Story