பெரியகுளத்தில்தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


பெரியகுளத்தில்தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

பெரியகுளத்தில் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

சோத்துப்பாறை

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 54 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதையடுத்து அங்கு சோத்துப்பாறை அணை கட்டும் பணி நடந்தது. இதனால் அந்த 54 குடும்பத்தினருக்கு பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பட்டா வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் குடியேறினர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை தங்களது வாரிசுகளின் பெயரில் மாற்ற முயற்சி மேற்கொண்டனர். இதற்காக தாலுகா அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்களின் பெயரில் பட்டா பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது.

தாலுகா அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுடன் பெரியகுளம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் அர்ஜூனன் அங்கு வந்தார்.

பின்னர் அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது பட்டாக்களை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story