தஞ்சையில், வக்கீல்கள் ஊர்வலம்


தஞ்சையில், வக்கீல்கள் ஊர்வலம்
x

இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் ஊர்வலமாக சென்றனர்.

தஞ்சாவூர்

இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் ஊர்வலமாக சென்றனர்.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தஞ்சை வக்கீல்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

2-வது நாளான நேற்று வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக தஞ்சை ரெயிலடியை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் தியாக.காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.

கோர்ட்டு பணிகள் பாதிப்பு

இதில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், தஞ்சை வக்கீல் சங்க முன்னாள் தலைவர் கோ.அன்பரசன், முன்னாள் செயலாளர் நல்லதுரை உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து 2 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த 2 நாட்களில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த வழக்குகள் எல்லாம் வேறொரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

இன்று(வெள்ளிக்கிழமை) ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


Next Story