வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் திருமங்கலம் கோர்ட்டில் சரண்


வாலிபர் கொலை வழக்கில்  5 பேர் திருமங்கலம் கோர்ட்டில் சரண்
x

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் திருமங்கலம் கோர்ட்டில் சரணடைந்தனர்

மதுரை

திருமங்கலம்

மதுரை அனுப்பானடி கணேஷ் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன் தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமர்பாண்டியன் தரப்பினர் பாபி கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாபி கார்த்திக், தன் நண்பர் வீட்டின் அருகே மதுகுடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமர்பாண்டியன் உள்ளிட்ட 13 பேர் அவரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் பாபி கார்த்திக்கை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த பாபி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரன், வேல்பிரதாப், சுந்தரபாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். ராமர்பாண்டியன் உள்ளிட்ட 8 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் ராமர் பாண்டியன், சுரேந்தர், கார்த்திக், நிதிஷ்குமார், தீபக் ஆகியோர் நேற்று திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


Next Story