மாவட்டத்தில்ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


மாவட்டத்தில்ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

மாவட்டத்தில் ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது

ஈரோடு

மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கோபி

கோபி அக்ரஹாரத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் நந்தி வாகனத்தில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் உலா நடந்தது.

மேலும் கோபி அருகே கூகலூாில் மீனாட்சி, அம்பிகா நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையடுத்து மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உலா வந்தனர். கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், பவளமலை கைலாசநாதர் கோவில், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், கோபி நஞ்சுண்டேஸ்வரர் கோவில், வாய்க்கால் ரோடு ஈஸ்வரன் கோவில் உள்பட கோபி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அம்மாபேட்டை- அந்தியூர்

அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி சிலைக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பஞ்சகாவியம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அந்தியூர் சிவசக்தி நாரில் உள்ள செல்லீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. அப்போது செல்லீஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொடுமுடி

கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உமா மகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சாமி உலா நடைபெற்றது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நாகேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நாகேஸ்வரர், அம்மன் ஆகியோர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story