மாவட்டத்தில் உள்ளசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


மாவட்டத்தில் உள்ளசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது

ஈரோடு

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6.30 மணி அளவில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர் மற்றும் அம்மன் சிலைகளுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்தி வாகனத்தில் நாகேஸ்வரர், அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கும், கொந்தளம் நாகேஸ்வரசாமி கோவிலில் உள்ள நந்திக்கும் பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர்.

கோபி

கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு தயிர், பால், எலுமிச்சை பழம், இளநீர், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விசாலாட்சி, விஸ்வேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விசாலாட்சி, விஸ்வேஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கோபி அருகே கூகலூரில் மீனாட்சி அம்பிகை, சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவிலின் உள் பிரகாரத்தில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், எலுமிச்சை பழம், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மீனாட்சி அம்பிகை சமேத நஞ்சுண்டேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உள் பிரகாரத்தில் 3 முறை உலா வந்தார்.

மொடச்சூர்

மேலும் கோபி மொடச்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில், கோபி அருகே உள்ள பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள மரகதீஸ்வரர் கோவில், பவளமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் உள்ள கைலாசநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story