முதல் கட்டமாக ஆருத்ரா மோசடி வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


முதல் கட்டமாக ஆருத்ரா மோசடி வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x

ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கின் முதல்கட்ட புலன் விசாரணையை முடித்து 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு கோர்ட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆருத்ரா நிறுவனத்தின நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

சொத்துகள் முடக்கம்

பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.க., நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

61 இடங்களில் நடந்த சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக்கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் டெபாசிட், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கின் முதல்கட்ட புலன் விசாரணை முடிக்கப்பட்டு, 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீஸ் சார்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் டி.பாபு நேற்று தாக்கல் செய்தார்.

3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதார ஆவணங்கள் ஓரிரு நாளில் தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், 360 புகார்களின் அடிப்படையில், ரூ.17 கோடியே 50 லட்சம் மோசடி குறித்து மட்டும் கூறப்பட்டுள்ளது.

சம்மன்

இந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, குற்றப்பத்திரிகை நகல் விரைவில் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story