விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார்


விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார்
x

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் விசாரணையின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

குடிநீர் தொட்டி அசுத்தம்

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் பலர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து அவர்கள் கூறியதாவது:-

குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று மிரட்டியும், ஆசை வார்த்தை கூறியும் அசுத்தம் செய்ததாக ஒப்புக்கொள்ள வலியுறுத்தினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாறியது.

உண்மையான குற்றவாளிகளை...

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தும் போது உங்களில் யாராவது ஒருவர் ஒத்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்கள். விசாரணை என்கிற பெயரில் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை துன்புறுத்தி வருகின்றனர்.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். நாங்கள் கூறும் நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரியாக விசாரணை நடத்துவதில்லை. நேர்மையாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story