தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில்விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்யலாம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்


தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

வேளாண் சந்தைத்திட்டம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தேசிய மின்னணு வேளாண் சந்தைத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஏதாவது ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து பிற மாவட்டம் மற்றும் மாநில வணிகர்களுக்கு மின்னணு முறையில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளைபொருட்களின் அளவு மற்றும் தரம் நிர்ணயம் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதோடு, வணிகர்களுக்கும் ஒரே தளத்தில் தேவையான விளைபொருட்கள் சரியான தரத்தில் கிடைக்க ஏதுவான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக வணிகர்களே மின்னணு ஏலத்தில் கலந்து கொள்வதால் போட்டியின் மூலம் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கான தொகை 48 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

இ-நாம் செயலி

விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி நேரடியாக வணிகர்களுக்கே விற்பனை செய்வதை உறுதிசெய்திடவும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் பண்ணை வழி வர்த்தகமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள், விவசாய விளை நிலங்களுக்கு சென்று விளை பொருட்களின் அளவு, தரம் மற்றும் இதர காரணிகளை ஆய்வுசெய்து அதன் விவரங்களை புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்கிறார்கள்.

இதன் மூலம் வணிகர்கள் அவர்களின் இருப்பிடத்திலிருந்தே விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது விளைபொருட்களை இ-நாம் செயலி அல்லது பண்ணை வழி வர்த்தகம் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story