பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 3 பேர் கைது


தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:47 PM GMT)

பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் கடந்த 22-ந் தேதி பா.ஜனதா, இந்து அமைப்புகளை ேசர்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 2 ஆட்டோ மற்றும் ஒரு சரக்கு வாகனத்தின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் 2 வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்க முயற்சி செய்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் பொது உடைமைகளை சேதப்படுத்துதல் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை

இதற்கிடையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 500-க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளான பொள்ளாச்சியை சேர்ந்த முகமது ரபீக் (வயது 26), ரமீஸ் ராஜா (36), சாதிக் சா (32) ஆகியோரை கடந்த 26-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது

மேலும் கைதான அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளரான பொள்ளாச்சியை சேர்ந்த அப்துல் ஜலீல் (34), பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினரான பொள்ளாச்சியை சேர்ந்த முகமது ரபீக் (31) மற்றும் அப்துல் ரகுமான் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story