கம்பம் பகுதியில்சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி


கம்பம் பகுதியில்சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:45 PM GMT)

கம்பத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.

தேனி

கம்பம், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த காய்கறி பயிர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. இதற்காக ஆழ்துளை கிணறு, கிணற்று பாசனம் மூலம் வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சும் போது அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. .தண்ணீர் பற்றாக்குறையான இடங்களில் பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.

இதனால் எதிர்பார்த்த மகசூல் பெறமுடியவில்லை. இதனையடுத்து மத்திய மாநில அரசு குறைந்த அளவு தண்ணீரில் நல்ல மகசூல் பெறும் வகையில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு மானியம் வழங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கம்பம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்தில் தண்ணீரானது மெதுவாகவும் குறைந்த அழுத்தத்திலும் செடியின் வேர்ப் பகுதியில் நேரடியாக அளிக்கப்படும். இதன் மூலம் காய்கறிகள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் இந்த பாசனத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Related Tags :
Next Story