தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 90.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி


தேனி மாவட்டத்தில்  பிளஸ்-1 தேர்வில் 90.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x

தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் 90.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்

தேனி

90.45 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 516 மாணவர்கள், 7 ஆயிரத்து 129 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 645 பேர் எழுதினர்.

அதில், 6 ஆயிரத்து 415 மாணவர்கள், 6 ஆயிரத்து 831 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.45 சதவீதம் ஆகும். அதுபோல், மாணவர்கள் தேர்ச்சி 85.35 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 95.82 சதவீதம் ஆகும். தேர்வு எழுதியவர்களில் 1,399 மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்தனர்.

தமிழில் 1,147 பேர் தோல்வி

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் தமிழ் பாடத்தில் 1,147 பேர் தோல்வி அடைந்தனர். ஆங்கிலம் பாடத்தில் 999 பேர் தோல்வியை தழுவினர். சிறப்பு தமிழ் பாடத்தில் 125 பேர் தேர்வு எழுதியதில், 53 பேர் தோல்வி அடைந்தனர். இந்த பாடப்பிரிவில் 57.60 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதத்தில் மற்றப் பாடங்களை காட்டிலும் சிறப்பு தமிழ் கடைசி இடத்தில் உள்ளது.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை 59 அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 577 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில், 4 ஆயிரத்து 681 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.93 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

100 சதவீத தேர்ச்சி

அதுபோல், கண் பார்வையற்ற மாணவ, மாணவிகள் 10 பேர், வாய்ப்பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 60 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். அவர்களில், 51 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதிய நிலையில், 2 அரசு பள்ளிகள் உள்பட 41 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


Next Story