திருவாரூரில், குடைமிளகாய் விற்பனை மும்முரம்


திருவாரூரில், குடைமிளகாய் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:45 PM GMT)

சீசன் தொடங்கியதால் திருவாரூரில் குடை மிளகாய் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1 கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவாரூர்

சீசன் தொடங்கியதால் திருவாரூரில் குடை மிளகாய் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1 கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குடை மிளகாய்

குடைமிளகாய் பெரியது, சிறியது என 2 வகைகளில் உள்ளது. இதில் பெரிய வகை குடைமிளகாய் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும். குறைந்த கார சுவையும், ஒருவகை மனமும் கொண்ட குடைமிளகாய் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்ய பயன்படுகிறது.

சிறியவகை குடைமிளகாய் தஞ்சை பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படுவதால் இதனை தஞ்சை மிளகாய் என்றும் கூறுவது உண்டு.

இந்த குடைமிளகாயை புளித்த தயிரில் உப்பிட்டு ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வத்தலாக்கி எண்ணெய்யில் பொறித்து சாப்பிடலாம்.

சீசன் தொடங்கியது

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலானோர் பழைய சோறுடன், மிளகாய் வற்றலை வைத்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இதனால் உடலில் வெப்பம் தணியும். சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் சர்க்கரை அளவு குறையும் என்பார்கள்.

தமிழகத்திலேயே தஞ்சை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அதிகம் விளையும் இந்த சிறிய வகையான குடைமிளகாய் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் திருவாரூரில் குடைமிளகாய் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிலோ ரூ.45-க்கு விற்பனை

திருவாரூர் மார்க்கெட்டிற்கு திருச்சி, கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட மார்க்கெட்டில் இருந்து குடை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 1 கிலோ குடை மிளகாய் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், விற்பனைக்கு வந்த குடை மிளகாயை வாங்கி வந்து உலர்த்தி, காயவைத்து மோரில் ஊறவைத்து மீண்டும் வெயிலில் உலர்த்தி வைத்து பதப்படுத்தி விடுவார்கள்.

ஒரு ஆண்டுவரை கெட்டுப்போகாது

இது போல் பக்குவமாக செய்தால், ஓராண்டு ஆனாலும் அவை கெட்டு போகாமலும் சுவையாக இருக்கும். மாசி, பங்குனி, சித்திரை தான் இதன் சீசன் காலம் தற்போது முன்கூட்டியே சீசன் தொடங்கிவிட்டது.

விலையை பொருத்தவரை ஏற்றுவதில் இருந்து கொண்டு வந்து இறக்கும் செலவுகளை பொருத்துதான் நிர்ணயம் செய்யப்படும். இது சீசனுக்கு மட்டுமே கிடைக்க கூடியது.. இதனால் இதன் விற்பனை நல்ல முறையில் தான் இருக்கும். தற்போது விலை குறைவாக இருந்தாலும் சீசன் முடியும் நேரத்தில் அதன் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story