தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 12:07 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனையானது.

தூத்துக்குடி

காய்கறி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு பாவூர்சத்திரத்தில் இருந்தும், வடமாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்த ஆண்டு பாவூர்சத்திரம் காய்கறிகள் இதுவரை தூத்துக்குடிக்கு வராததால், காய்கறியின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த வாரத்தை விட அனைத்து காய்களிலும் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் இஞ்சி, மிளகாய், தக்காளி விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. கேரட்டை பொறுத்தவரை ஊட்டி கேரட் மட்டுமே வருகிறது. கொடைக்கானல் கேரட் வரத்து அதிகரித்த உடன் விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை விவரம்

நேற்று தூத்துக்குடி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையும், தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரையும், சின்னவெங்காயம் ரூ.110-க்கும், பல்லாரி ரூ.30-க்கும், இஞ்சி ரூ.280-க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70 வரையும், குடை மிளகாய் ரூ.100-க்கும், சம்பா மிளகாய் ரூ.80-க்கும், சீனிஅவரைக்காய் ரூ.60-க்கும், பட்டர் பீன்ஸ் ரூ.120-க்கும், அவரை ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், சவ்சவ் ரூ.30-க்கும், பீட் ரூட் ரூ.30 முதல் ரூ.50 வரையும், மாங்காய் ரூ.20-க்கும், சேனைக்கிழங்கு ரூ.60-க்கும், எலுமிச்சை ரூ.60-க்கும் விற்பனையானது.

இந்த காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


Next Story