தூத்துக்குடியில்,லோடு வேனில்ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் கடத்திய வாலிபர் சிக்கினார்


தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:47 PM GMT)

தூத்துக்குடியில்,லோடு வேனில் ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.10லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை லோடுவேனில் கடத்திய வாலிபரை வன பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

வனத்துறையினர் சோதனை

தூத்துக்குடியில் இருந்து சட்ட விரோதமாக கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மன்னார் வளைகுடா வன பாதுகாப்பு படை ராமநாதபுரத்தம் உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி வனவர் நந்தகுமார், வன காப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லோடு வேனை மடக்கி சோதனை செய்தனர்.

கடல் அட்டைகள் கடத்தல்

விசாரணையில், அந்த வேனை ஓட்டிவந்தவர் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த முகமது ரபிக் மகன் ஜாகிர் உசேன் (வயது 28) என தெரியவந்தது அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார் இதை தொடர்ந்து வேனில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சட்ட விரோதமாக கடல் அட்டைகளை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வேனில் கடத்தப்பட்ட 11 பைகளில் இருந்த 160 கிலோ கடல் அட்டைகளை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.10லட்சமாகும்.

கைது-வேன் பறிமுதல்

இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவுசெய்து ஜாகிர் உசேனை கைது செய்து, அவரிடமிருந்து கடல் அட்டைகளையும், கடத்தலுக்குப்பயன்படுத்திய லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story