தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது


தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி படுகொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி கொலை

தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 42). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 3.4.23 அன்று அண்ணாநகர் சலவைக்கூடத்தில், தனது நண்பர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பையா மகன் சப்பாணி முத்து (43) என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தார். கடந்த மாதம் மாரியப்பன் ஜாமீனில் வெளியில் வந்து உள்ளார்.

கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி மையவாடிக்குள் மாரியப்பன சென்றார். இதனை பார்த்த மர்மநபர்கள் அங்கு சென்று மாரியப்பனை சரமாரியாக வெட்டினர். அவருடைய தலையை துண்டித்து கொலை செய்தனர். பின்னர் ஒரு பையில் அந்த தலையை எடுத்து சென்று, சப்பாணி முத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

6 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சப்பாணிமுத்துவின் உறவினர்கள் பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சப்பாணி முத்துவின் உறவினர்கள் டி.எம்.பி. காலனியை சேர்ந்த மாடசாமி மகன்கள் சுப்புராஜ் என்ற பியோராஜ் (24), மாரிலிங்கம் (23) மற்றும் அவர்களின் நண்பர்கள் அண்ணாநகரை சேர்ந்த சுப்புராஜ் (23), 18 வயது சிறுவர்கள் 2 பேர், 17 வயது சிறுவர் ஒருவர் ஆகிய 6 பேரும் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story