தூத்துக்குடியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்ட ரவுடி கைது


தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட ரவுடி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கத்தியை காட்டி மிரட்டல்

தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் மருத்துவமனை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் பாண்டியன் மகன் மோகன் என்ற மோகன்ராஜ் (41) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

கைது

உடனே தனிப்படை போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மோகன் என்ற மோகன்ராஜ் மீது ஏற்கனவே வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 19 வழக்குகளும், மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 3 வழக்குகளும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குகள் உட்பட 4 வழக்குகளும் என மொத்தம் 28 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story