தூத்துக்குடியில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்சனிக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு மருத்துவ முகாம்
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய 3 கோட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தூத்துக்குடி கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
முகாமில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் பதிவு செய்யலாம். இதுவரை முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை பெறாதவர்கள், காப்பீட்டு அட்டை பெறலாம். ஆதார் பெற இயலாதவர்களுக்கு சிறப்பு ஆதார் முகாம் மற்றும் மருத்துவ துறையின் மூலம் பொது மருத்துவ சேவை வழங்கப்படும்.
பயன் பெறலாம்
மேலும் 90 சதவீதத்துக்கும் அதிக பாதிப்புடைய கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், மூளை முடக்குவாதம் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட நபர்களுக்கான கூடுதல் பராமரிப்பு உதவித்தொகை வேண்டுபவர்கள் முகாமில் நடைபெறும் மருத்துவ குழுவின் தேர்வில் கலந்து கொள்ளலாம். எனவே தூத்துக்குடி கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






