தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 11:33 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம், வேப்பலோடை ஆகிய 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தொழிற்பயிற்சி நிலையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த 24.05.2023 முதல் 20.06.2023 வரை மாணவர்களிடம் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை ஐ.டி.ஐ சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள விரும்புவோர் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரு நகல்களுடன் சேர விரும்பும் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதிசெய்யலாம்.

உதவித் தொகை

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வருகைக்கு ஏற்ப உதவித்தொகை ரூ.750-ம், கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே இதுவரை ஐ.டி.ஐ-யில் விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி நேரடியாக தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story