பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில்வெல்லம் விலை உயர்வு
![பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில்வெல்லம் விலை உயர்வு பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில்வெல்லம் விலை உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/1445042-1770548-vlcsnap-2023-06-15-18h31m50s2471.webp)
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்
வெல்ல ஏல சந்தை
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
விலை உயர்வு
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,500 வரையிலும் ஏலம் போனது.
நாட்டுச் சர்க்கரை சிப்பம் ஒன்று கடந்த வாரம் ரூ.1,300-க்கும், நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டு சர்க்கரை சிப்பம் ஒன்று ரூ.1,350-க்கும் ஏலம் போனது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெல்லம் விலை உயர்ந்திருப்பதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.