கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரிப்பு


கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 July 2023 7:45 PM GMT (Updated: 30 July 2023 7:45 PM GMT)

கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரித்து கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரித்து கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

விலை உயர்வு

தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் தொடங்கும்போது ஒரு கிலோ கறிக்கோழி ரூ.103 (உயிருடன்) ஆக இருந்தது. 18-ந் தேதி கிலோவிற்கு ரூ.10 கொள்முதல் விலை சரிந்து ரூ.93 ஆனது.

பின்னர் 20-ந் தேதி ரூ.86, 23-ந் தேதி ரூ.90, 26-ந் தேதி ரூ.97, 27-ந் தேதி ரூ.100, 29-ந் தேதி ரூ.105 என விலை உயர்ந்து உள்ளது. கடந்த 13 நாட்களில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 உயர்ந்து உள்ளது. இதனால் தற்போது கிலோவிற்கு ரூ.8 வரை லாபம் கிடைக்கிறது. இதனால் கறிக்கோழி உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இன்னும் அதிகரிக்கும்

தற்போது சிக்கன் ஸ்டால்களில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் என்பதால் பெரும்பாலானோர் இறைச்சி நுகர்வை தற்காலிகமாக கைவிட்டு உள்ளனர். இதனால் இறைச்சி நுகர்வு சற்று குறைந்துள்ளது.

இன்னும் 2 வாரங்களில் ஆடி மாதம் முடிந்த பிறகு கறிக்கோழி நுகர்வு மீண்டும் அதிகரிக்கும். அப்போது கொள்முதல் விலையும் அதிகரிக்கும் என்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story