ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 July 2023 7:15 PM GMT (Updated: 1 July 2023 7:15 PM GMT)

வார விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

நீலகிரி


ஊட்டி


வார விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.


சுற்றுலா பயணிகள்


நீலகிரி மாவட்டத்தின் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மே மாதத்தில் சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்ததால், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.


குறிப்பாக கடந்த 2 வாரங்களாக ஊட்டி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று வார விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர்.


கண்டு ரசிப்பு


ஊட்டி தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். அதனை செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அலங்கார வேலிகள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் அமர்ந்து பொழுதை கழித்தனர்.


ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் ஊட்டி படகு இல்ல சாலையில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய பல்வேறு வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். இதேபோல் தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர்.



Next Story