காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு  அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.

கனமழை

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார். இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பரிசல்கள் காவிரி கரையோரம் கவிழ்த்து போடப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.


Next Story