ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகா, கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியானது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடந்து தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும் கர்நாடக அரசு பரிசல் இயக்க அனுமதி அளித்துள்ளதால் பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை ஒகேனக்கல் மெயின் அருவி வரை அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பொது போக்குவரத்துக்கு மட்டும் அனுமதித்தனர். இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு

இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள போடூர் பள்ளம், கோவில் பள்ளம், சறுக்கல்பாறை, முத்தூர் மலை மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.


Next Story