ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்தது

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனிடையே மீண்டும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் கரைகளை தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு பணியினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story