மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலையில் மழை:  அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து உள்ளது

தென்காசி

நெல்லை:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று காலை வரை 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 60.55 அடியாக இருந்த நிலையில், நேற்று நீர்மட்டம் ஒரேநாளில் 2½ அடி உயர்ந்து 63.05 அடியாக உள்ளது.

அணைக்கு தற்போது வினாடிக்கு 1,176 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக வினாடிக்கு 806 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் நேற்று 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று முன்தினம் 76.11 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் நேற்று 1 அடி உயர்ந்துள்ளது.

பரவலாக மழை

இதேபோல் அம்பை, சேரன்மாதேவி, களக்காடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. களக்காட்டில் அதிகபட்சமாக 2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணை பகுதிகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால் அந்த அணைகளின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கடனாநதி அணையின் நீர்மட்டம் 60.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 73.25 அடியாகவும் உள்ளது.


Next Story