வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

முதுமலையில் பசுமை திரும்பியதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் பசுமை திரும்பியதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வறட்சி நீங்கி பசுமை திரும்பியது. வறட்சி காலங்களில் உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து சென்றது.

பின்னர் பசுமை திரும்பியதால் வனவிலங்குகள் முதுமலைக்கு திரும்பியது. இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் முதுமலையில் உள்ள மாயாறு உள்பட அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன.

வருகை குறைவு

இதேபோல் மயில்கள் உள்ளிட்ட பறவை இனங்களும் சாலையோரம் இரைக்காக நடமாடுகிறது. தொடர் மழை காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்து உள்ளது. இதன் காரணமாக கூடலூர் ஊசிமலை, தாவரவியல் பூங்கா, முதுமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் கூடலூர், முதுமலையில் இருந்து மசினகுடிக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொடர் மழை மற்றும் சீதோஷ்ண நிலை சரியாக இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது என்றனர்.


Next Story