வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

முதுமலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனம் பசுமையாக காணப்படுகிறது. இதன் காரணமாக மான்கள், காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை வனவிலங்குகள் அடிக்கடி கடந்து வருகிறது. இதனால் வாகனங்களை வேகமாக இயக்குவதை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல், சத்தம் எழுப்பி இடையூறு செய்தல் உள்ளிட்ட வரம்பு மீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இடையூறு செய்யக்கூடாது

இந்தநிலையில் வார இறுதி நாட்கள் என்பதால் கர்நாடகா, கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

முதுமலையில் தொடர் மழை காரணமாக குளுகுளு காலநிலை நிலவுகிறது. இதற்கு ஏற்ப வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனவிலங்குகளுக்கு உணவு அளித்தல், இடையூறு செய்தல் கூடாது. இது தொடர்பாக முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story