இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும்- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி


இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும்-  மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
x

2040-ம் ஆண்டில் நிலக்கரி தேவை 1,500 மில்லியன் டன்னாக அதிகரிப்பதுடன், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும் என நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

கடலூர்

நெய்வேலி,

மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் சென்னையில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட, பதிவு அலுவலகத்தை, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த என்.எல்.சி. இந்தியா நிறுவன ஊழியர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராகேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு 6 பேருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மின்உற்பத்தி

பின்னர் அவர் பேசுகையில், 2040-ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தி, சுமார் 3 ஆயிரம் பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும். இந்தத் தேவையை பூர்த்தி செய்ய 2040-க்குள், அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை சுமார் 1500 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.

மேலும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை சார்ந்திருப்பதை, மரபுசாரா எரிசக்தி மூலங்களின் வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். எனினும், மரபுசாரா எரிசக்திக்கான நமது மாற்றம், பெரும்பாலும் படிப்படியாகத்தான் இருக்கும்.

அதிகபட்ச இலக்கு

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மொத்தமின் உற்பத்தி, மொத்தமின் ஏற்றுமதி, நிலக்கரி உற்பத்தி, பழுப்பு நிலக்கரி விற்பனை மற்றும் நிலுவைத்தொகை வசூலிப்பு திறன் ஆகியவற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச இலக்குகளை எட்டியுள்ளது என்றார்.

இதில் என்.எல்.சி. நிறுவன இயக்குனர்கள், தலைமை கண்காணிப்புத்துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகத்துறை செயல் இயக்குனர் சதீஷ்பாபு நன்றி கூறினார். முன்னதாக நெய்வேலி சுரங்கங்கள், புதிய அனல் மின் நிலையம், ஆனந்தம் இல்லம் (என்.எல்.சி. மூலம் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லம்) மற்றும் சூரியமின்சக்தி நிலையங்கள்ஆகியவற்றை மத்திய மந்திரி பார்வையிட்டார்.


Next Story