இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் திறப்பு


இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் திறப்பு
x

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு உள்ளது. இதனை நடிகர்கள் திறந்து வைத்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் கார்பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது.

அதைதொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து காத்து இருக்கும் பயணிகள், சென்னை வந்து மாற்று விமானத்துக்காக அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்க வந்து காத்திருப்பவர்களுக்காக 5 திரைகள் கொண்ட திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது.

நடிகர்கள் பங்கேற்பு

இந்த திரையரங்கை நடிகர்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். 5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். மேலும் கூடிய விரைவில் உணவு விடுதிகள், சில்லறை கடைகள் திறக்கப்பட உள்ளன.

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story