அகில இந்திய தொழிற்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வை எழுத விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய தொழிற்தேர்வு
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 18.9.2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
தொழிற்பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பித்து முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர், நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலை தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் 10.10.2023 மற்றும் செய்முறை தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்துகொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 2024 ஜூலையில் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம்
தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200 மட்டும்) www. Karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூல கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணையவழியாக தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18.9.2023-க்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






