பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்தது; அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா? பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து


பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்தது; அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா? பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து
x

பணவீக்கம் என்பது நாட்டில்உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின்விலையைப் பொறுத்து, நுகர்வோர்குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.

சென்னை

பணவீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில்2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.

பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.

அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

வாங்கும் சக்தி குறைந்தது

கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் தலைவர் பழக்கடை ஜெயராமன்:-

காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் விளைச்சல் அமோகமாக இருந்தால் விலை குறையும், விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவாக இருந்தால் விலை ஏறும். இந்த ஆண்டு அனைத்து பழ வகைகள் விலையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. பாதாம் பருப்பு விலை கிலோவுக்கு 100 ரூபாயும், முந்திரி பருப்பு விலை கிலோவுக்கு50 ரூபாயும் குறைந்து இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் வரிச்சுமையை மக்கள் தலையில் தொடர்ந்து ஏற்றி வைப்பதாலும், அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து ஏறுவதாலும் மக்களிடையே வாங்கும் திறன் குறைந்து விட்டது. மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்துவிட்டது. எனவே கிலோ கணக்கில் வாங்கி சென்றவர்கள் இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

வியாபாரி கார்த்திகேயன்:-

சரக்கு வாகனங்களில் உதிரிப்பாகங்கள் விலையேற்றம், உச்சம் தொட்ட பெட்ரோல்-டீசல், சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கியே செல்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனையான மோட்டார் வாகனங்கள் விலை ரூ.1 லட்சத்தை தாண்டிவிட்டது. இதேப்போன்று ஒவ்வொரு பொருளின் விலையும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

ஆனால் பண வீக்கம் குறைந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் என்பது சாமானிய மக்களின் மனநிலையாக இருக்கிறது. தற்போது பணவீக்கம் குறைந்து வந்தாலும் விலைவாசி உயர்வுக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை.

இல்லத்தரசிகள் ஆதங்கம்

புரசைவாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி சர்மிளா:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தால் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்துவிடுகிறது. அதேப்போன்று மளிகை, காய்கறிகள் விலை உயர்ந்தால் ஓட்டல்களில் உணவு வகைகள் விலை ஏறுகிறது. ஆனால் பெட்ரோல்-டீசல் விலை குறைந்தால் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் குறைக்கப்படுவது இல்லை. இது மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கிறது.

தற்போது பணவீக்கம் குறைந்து வருகிறது என்று சொல்கிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள், ஆடைகள் விலை குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஏற்கனவே வாங்கிய விலையைவிட அனைத்து பொருள்களும் கூடுதல் விலையில் தான் இருக்கிறது.

வில்லிவாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி அன்னலட்சுமி:-

பணவீக்கம் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. ஆனால் இதனால் தாறுமாறாக ஏறிய பொருட்கள் விலை குறையவா போகிறது?

தற்போது பணவீக்கம் குறைந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. இது என்னைப்போன்று மாதந்தோறும் குடும்பங்களுக்கு 'பட்ஜெட்' போடும் இல்லத்தரசிகளுக்கு நன்றாக தெரியும்.

உளுந்து, டீ தூள், நெய், சோப்பு போன்ற மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் உள்ளது. எண்ணெய் விலை மட்டும் கொஞ்சம் குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பண வீக்கம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை இனி உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே போதும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

'பணவீக்கம்' வார்த்தையை எளிமைப்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

தமிழில் சில வார்த்தைகள் அலங்காரத்துடன் இருக்கும். இந்த வார்த்தைகளின் அர்த்தம் படித்தவர்கள் மனதில் சட்டென்று பதிந்தாலும் படிக்காத பாமர மக்களுக்கு உடனே புரியாது.

பொருளாதார மேதைகள் பணவீக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கிய நேரத்தில் பாமர மக்கள் அதன் உள் அர்த்தம் புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விலைவாசி உயர்வுதான் பணவீக்கம் என்று 'தினத்தந்தி' மூலம் மக்களுக்கு தெளிவுப்படுத்தியவர் மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story