தொடர் மழை: கள்ளக்குறிச்சி வாரச்சந்தைக்கு பருத்தி வரத்து குறைவு


தொடர் மழை:    கள்ளக்குறிச்சி வாரச்சந்தைக்கு பருத்தி வரத்து குறைவு
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி வாரச்சந்தைக்கு பருத்தி வரத்து குறைந்து காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு நேற்று 22 விவசாயிகள் மட்டுமே 64 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதனை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

இதில் எல்.ஆர்.ஏ. ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9,148-க்கும், குறைந்த பட்சமாக ரூ.7688-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5,018-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,189-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த வாரச்சந்தையில் மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கு பருத்தி விற்பனையானது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக விளை நிலங்களில் உள்ள செடியில் பருத்திகளை எடுத்து உலர வைத்து சந்தைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதால் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு பருத்தி மூட்டைகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் கூறுகையில், பருத்தி வாரச்சந்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெறலாம் என்றார்.


Next Story