'நூடுல்ஸ்' சாப்பிட்டு இறந்த குழந்தையின் உடலில் காயங்கள்


நூடுல்ஸ் சாப்பிட்டு இறந்த குழந்தையின் உடலில் காயங்கள்
x

திருச்சியில் ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு இறந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஜூன்.21-

திருச்சியில் 'நூடுல்ஸ்' சாப்பிட்டு இறந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலர்ஜியால் பாதிப்பு

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள மருதமுத்து நகரை சேர்ந்த சேகர்- மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்தருண்(வயது 2). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வாமையால் (அலர்ஜி) சாய்தருண் பாதிக்கப்பட்டு, உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி சாய் தருணுக்கு 'நூடுல்ஸ்' சமைத்து கொடுத்துவிட்டு, மீதமிருந்த 'நூடுல்சை' குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 'நூடுல்சை' மகாலட்சுமி சாய்தருணுக்கு சாப்பிட எடுத்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சாய்தருண் அன்று மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளான்.

சாவு

மேலும் அன்று மாலை சாய்தருண் திடீரென வாந்தி எடுத்து, சுருண்டு கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, சாய்தருணை தூக்கிக்கொண்டு பஸ்சில் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு சாய்தருணை பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாய்தருண் துரித உணவான 'நூடுல்சை' உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

உடலில் காயங்கள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின்போது சிறுவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் மற்றும் உள்காயங்களும், விலா எலும்பில் முறிவு இருந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் தலைமையிலான போலீசார் சாய்தருணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அடிக்கடி கீழே விழுவான்

விசாரணையில், அவர்கள் சாய்தருண் அடிக்கடி கீழே விழுவான். இதில் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்தருணுக்கு அக்கி என்று சொல்லக்கூடிய வைரஸ் தொற்று ஏற்பட்டு உடலில் பரவி உடல்நலம் குன்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் சமீபத்தில் சைக்கிள் ஓட்டியபோது, கீழே விழுந்துள்ளதாகவும் பக்கத்து வீட்டினரும் தெரிவித்தனர்.

சாய்தருணின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே அவன் இறந்ததற்கான காரணம் தெரியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story