மீன் வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம்


மீன் வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம்
x

மீன் வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீனவ விவசாயிகள், சொந்த நிலத்தில் 250 முதல் 1,000 ச.மீ. அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருள்கள் மற்றும் பறவை வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் இருந்து 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட மானியத்தொகையானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வருகிற 31-ந்தேதிக்குள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண் 234-ல் உள்ள உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திலும் அல்லது பெரம்பலூர் எஸ்.கே.சி. காம்பளக்சில் மேல்தளத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திலும் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699 என்ற தொலைபேசி எண்ணையும், 6381344399 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story