கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வாக்குப்பதிவு எந்திர முதல்நிலை சரிபார்ப்பு பணியை அதிகாரி ஆய்வு


தினத்தந்தி 5 July 2023 7:00 PM GMT (Updated: 5 July 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணைய மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கென மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடந்து வருகிறது.

இந்த பணியை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராகேஷ்குமார், சார்பு செயலாளர் ரித்தீஷ்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.

ஆய்வு

பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எம்.சரயு மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவநந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) ஜெய்சங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.



Next Story